Saturday, June 19, 2010

Judgement

எதிர் நோக்குதல்

- இது எங்கு போய் முடியும்?

மரித்தோரின் உயிர்த்தெழுதலும் இறுதி நியாயத்தீர்ப்பும்

எபிரெயருக்கு எழுதின நிருபத்தில், மனிதருக்குரிய தேவனுடைய வெளிப்பாடுகளில் உயிர்த்தெழுதலும், இறுதி நியாயத்தீர்ப்பும் அடங்கும்.

நாம் இப்போது வாழ்கிற வாழ்க்கை, வரப்போகிற காலத்தின் மேல் நாம் வைத்திருக்கிற நம்பிக்கையைப் பொறுத்து அமைகிறது. அதனால், நமக்குமுன்பாக தேவன் வைத்திருக்கிற இந்த இரண்டு அடிப்படை உண்மைகளைக் குறித்து நாம் பார்ப்போம்.

மரித்தோரின் உயிர்த்தெழுதல்

இரண்டு காரியங்களைக் குறித்து நாம் உறுதியாக இருக்கலாம்: எல்லா மனிதர்களும் தேவனால் உயிர்ப்பிக்கப்படுவார்கள், எல்லா மனிதர்களும் தேவனால் நியாயந்தீர்க்கப்படுவார்கள்: இதில் விசுவாசிகளும், அவிசுவாசிகளும் அடங்குவர். இந்த உபதேசம் தேவன் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் உங்களுக்கென வைத்திருக்கிற திட்டத்தைக் குறித்து நம்பிக்கையைக் கொடுக்கும்.

நீங்கள் ஒரு புதிய சரீரத்தைப் பெறுவீர்கள்

உயிர்த்தெழுந்தவர்களுக்குள்ளே இயேசு கிறிஸ்து முதற்பலனானவரானபடியால், அவரை விசுவாசிக்கும் அனைவருக்கும் சரீர உயிர்த்தெழுதல் உண்டு என்பது ஒரு வாக்குத்தத்தமாயிருக்கிறது.

அநேக இளம் கிறிஸ்தவர்கள் எழுப்புகின்ற ஐந்து முக்கியக் கேள்விகளுக்கு நாம் இப்போது பதிலளிப்போம்.

இயேசு மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று நான் உறுதியாயிருக்கலாமா? ஆம். நீங்கள் நம்பலாம்: ஏனெனில் புதிய ஏற்பாடு நம்பிக்கைக்குரியது.

உதாரணமாக, லூக்கா, சுவிசேஷத்தை மட்டுமல்ல, அப்போஸ்தலர் நடபடிகளையும் எழுதினார். அவர் வரலாற்றில் அதிக அக்கறை எடுத்து, இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கான ஆதாரத்தைக் குறிப்பிட்டிருக்கிறார்.

""ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறிய வேண்டுமென்று,...'' லூக்கா 1:3,4. ""அவர் (இயேசு) பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்கு தரிசனமாகி, தேவனுடைய இராஜ்ஜியத்திற்குரியவைகளை அவர்களுடனே பேசி... அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்'' அப்போஸ்தலர் 1:3.

இயேசு தாம் மரித்தோரிலிருந்து எழுந்திருப்பார் என்று அநேகமுறை கூறினார். பழைய ஏற்பாடும் அவருடைய மரணம், உயிர்த்தெழுதலை முன்னுரைத்துள்ளது. அவருடைய சீடர்கள், இந்த வாக்குத்தத்தத்தை ஏற்றுக் கொள்ளவோ அல்லது இது நடக்குமென்றோ எதிர் பார்க்கவில்லை. எனினும், அவருடைய விரோதிகள் இந்த வாக்குத்தத்தம் உண்மையாவதைத் தடுக்க அதிக பிரயாசம் எடுத்துக்கொண்டனர்.

""ஆகையால், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டுபோய், மரித்தோரிலிருந்து எழுந்தானென்று ஜனங்களுக்குச் சொல்லாதபடிக்கு... நீர் மூன்று நாள் வரைக்கும் கல்லறையைப் பத்திரப்படுத்தும்படி கட்டளையிட வேண்டும் என்றார்கள். அதற்குப் பிலாத்து: உங்களுக்குக் காவல் சேவகர் உண்டே; போய், உங்களால் கூடியமட்டும் பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள் என்றான். அவர்கள் போய்க் கல்லுக்கு முத்திரைபோட்டு, காவல் வைத்து, கல்லறையைப் பத்திரப்படுத்தினார்கள்'' மத்தேயு 27:64--66.

ஏரோதின் காவலையும் மீறி, மூன்றாம் நாளில் கல்லறை வெறுமையாகக் காணப்பட்டது. இயேசுவைச் சுற்றியிருந்த சீலை கலையாமல் இருந்தது. ஆனால் அவருடைய சரீரமோ காணாமற்போனது. லூக்கா 24:22--24. இதற்குப் பிறகு உடனே இயேசு அவருடைய சீஷர்களுக்குக் காட்சி தர ஆரம்பித்தார். அவர்கள் இயேசுவை உயிருள்ளவராக அநேகதடவை, அநேக இடங்களில் பார்த்தனர். ""இயேசு பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்கு தரிசனமாகி, தேவனுடைய இராஜ்ஜியத்திற்குரியவைகளை அவர்களுடனே பேசி அநேகம் தெளிவான திருஷ்டாந்தங் களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்'' அப். 1:3.

""கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார். அதன் பின்பு அவர் ஐந்நூறு பேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரே வேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள் வரைக்கும் இருக்கிறார்கள்'' 1 கொரி. 15:5,6.

சீஷர்கள் இயேசுவை உயிருள்ளவராக எதிர்பார்க்காததால், அவர்கள் அவரை அறிந்துகொள்ளுவதற்காக அவர், தம் முடைய சில பழக்கவழக்கங்களை மற்றும் குணாதிசயத்தைக் காண்பிக்க வேண்டியிருந்தது. ""அவர் இப்படிச் சொல்லித் தம்முடைய கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண் பித்தார். சீஷர்கள் கர்த்தரைக்கண்டு சந்தோஷப்பட்டார்கள்'' யோவான் 20:20.

இயேசு மரித்து, உயிர்த்தெழுந்தபின் பதினொரு முறை மக்கள் அவரை பல சந்தர்ப்பங்களில் பார்த்ததாக சுவிசேஷங் கள் மற்றும் அப்போஸ்தல நடபடிகளிலும் எழுதப்பட் டிருப்பதாக ஒரு கிறிஸ்தவ எழுத்தாளர் கூறுகிறார்.

இயேசுவைப் பார்த்த சாட்சிகள், இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்தபோது அவரை நன்கு அறிந்தவர்கள்; இந்த சாட்சிகள் முன்னமே தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டு, தயார்படுத்தப்பட்டவர்கள்; இவர்கள் பார்த்ததை விவரிக்கும்படி பரிசுத்த ஆவியானவரால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள்: அப். 1:8,21,22; 10:39-41. ஒவ்வொரு முறையும் உயிர்த்தெழுந்த காட்சி அதைப்பார்த்த நபரை மாற்றியிருக்கிறது.

இயேசு சரீரத்தில் உயிர்த்தெழுந்தார் என்று நான் நம்பலாமா? ""ஆம்''. இயேசு உயிர்த்தெழுந்தபின், தொட்டுக் பார்க்கக்கூடிய சரீரம் அவருக்கு இருந்தது. கலக்கத்துடனும் சந்தேகத் துடனுமிருந்த தம் சீஷர்களை நோக்கி, ""நான்தான் என்று அறியும்படி, என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிற படி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறது போல ஒரு ஆவிக்கு இராதே என்று சொன்னார்...'' லூக்கா 24:39.

""...அவர் மரித்தோரிலிருந்து எழுந்தபின்பு அவரோடே புசித்துக் குடித்தவர்களும் தேவனால் முன்பு நியமிக்கப்பட்ட சாட்சிகளுமாகிய எங்களுக்கே பிரத்தியட்சமாகும்படி செய்தார்.''அப் 10:41 என்று பேதுரு கூறுகிறார். இயேசு மரித்து, இன்றைக்கும் உயிரோடிருக்கிறாரென்ற உங்களுடைய நம்பிக்கையானது, சரித்திர நிகழ்ச்சிகளான உறுதியான பாறையின்மேல் இருக்கிறது. இந்த நம்பிக்கையின்மேல் நீங்கள் உறுதியாக இருக்கலாம்.

பவுலின் வாழ்க்கை மாற்றம், பத்மு தீவில் யோவானின் தரிசனமும் போன்றவை அவர்களுடைய சொந்த சாட்சியை நீங்கள் ஏற்றுக்கொள்ளும்போதுதான் உங்களுக்கு அர்த்த முள்ளதாக இருக்கும். இயேசு உயிர்த்தெழுந்து, பரத்திற் கேறினவுடனே, அவர்களுக்குத் தனிப்பட்ட விதத்திலே காட்சிகொடுத்தார். ""...பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்துக்கும் பாதாளத்துக்குமுரிய திறவுகோல்களை உடையவனாயிருக்கிறேன்'' வெளி. 1:17,18.

என் சொந்த மரணத்தைக் குறித்த காரியம் என்ன?

வேதத்திலுள்ள காட்சிகள் நம்முடைய சொந்த மரணத்தைக் குறித்த நம்பிக்கையைக் கூட்டுகின்றன. பவுல் இதைக் குறித்துக் கூறும்போது, ""...தேகத்தை விட்டுக் குடிபோகவும்'' மரிக்கும்போது, ""...கர்த்தரிடத்தில் குடிபோகவும்'' என்று கூறுகிறார். 2 கொரி. 5:8.

அவர் மரணத்தை நித்திரைக்கு ஒப்பிடுகிறார் - கவலை, தவிப்பு, சோதனை, பரீட்சையிலிருந்து விடுதலை; 1 கொரி. 15:6, 1 தெச. 4:13,14.

மரணம் புறப்படுவதற்கு ஒப்பிடப்படுகிறது - கப்பல் ஒரு பெரிய நல்ல இடத்திற்குச் செல்வதற்காக, நங்கூரத்தை எடுப்பதைப் போன்றது.

மரணம் ஒரு யாத்திரைக்கு ஒப்பிடப்படுகிறது - இந்தத் தற்காலிகக் கூடாரத்தைக் கலைத்துவிட்டு, ஆத்துமாவும், ஆவியும் வாழத் தகுதியான, நிரந்தர இடமான வாக்குத் தத்தம் பண்ணப்பட்ட இடத் திற்குச் செல்வது. ""பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலை யல்லாத நித்தியவீடு நமக்குப் பரலோகத்தில் உண்டு என்று அறிந்திருக்கிறோம். இதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறவர் தேவனே; ஆவியென்னும் அச்சாரத்தை நமக்குத் தந்தவரும் அவரே'' 2 கொரி. 5:1,5.

நான் மரிக்கும்போது எனக்கு என்ன நடக்கும்?

மரணத்தில் மூன்று முக்கிய மாற்றங்கள் அடங்கும்.

உங்களுடைய ஆவி (அல்லது உள்ளான மனிதன்), மற்றும் உங்கள் ஆத்துமா (மனது, உணர்ச்சி, சித்தம்) உங்கள் சரீரத்திலிருந்து பிரியும்.

உங்கள் சரீரத்திலுள்ள வேதிப்பொருள்கள் உடைந்து, புழுதிக்குத் திரும்பும். (புதைப்பது அல்லது எரிப்பதினால்)

உங்கள் ஆவியும் ஆத்துமாவும் ஒரு புதிய நிலைக்குச் சென்று, தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கும், சரீர உயிர்த்தெழுதலுக்கும் காத்திருக்கும்.

நீங்கள் மறுபடியும் பிறந்திருப்பதினால், இந்த உலகப் பிரகாரமான பிரிவைக்குறித்து பயப்பட வேண்டாம். உங்களுடைய ஆவியும், ஆத்துமாவும் தேவபிரசன்னமாகிய பரதீசுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

அவிசுவாசிகள், தேவனிடத்திலிருந்து பிரிக்கப்பட்ட இடமாகிய பாதாளத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, கடைசி நியாயத் தீர்ப்பிற்காக அங்கே காத்திருப்பார்கள்.

நான் தொடர்ந்து நானாக இருப்பேனா?

உயிர்த்தெழுதல் என்பது மரணத்திலிருந்து மறுபடியும் உயிரடைவதாகும். உங்கள் ஆவி, ஆத்துமா, சரீரம் ஆகியவை மரணத்தால் பிரிக்கப்பட்டாலும்- உங்கள் சரீரம் அழுகிப்போனலும்-தேவன் அதை மறுபடியும் சேர்ப்பார்.

உங்கள் தனித்தன்மையோடு, ஞாபகசக்தி, புரிந்துகொள்ளும் சக்தி, மற்றும், மற்றவர்களோடு தொடர்புகொள்ளும் ஆற்றல் போன்றவை திரும்பப் பெறப்படும்.

நீங்கள் உயிர்த்தெழும்போது, நிச்சயமாக, உங்கள் சொந்த சரீரத்தையே பெறுவீர்கள். ஆனால், அது உங்களுடைய புதைக்கப்பட்ட அல்லது எரிக்கப்பட்ட சரீரமல்ல, அது தேவனுடைய வல்லமையால் மறுரூபமாக்கப்பட்ட சரீரம். ""நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்... நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்'' பிலிப்பியர் 3:20,21.

நீங்கள் மரணத்திலிருந்து எழும்பும்போது, உங்கள் தனித்தன் மையை உடையவராகவே இருப்பீர்கள். உங்கள் நண்பர் களை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வீர்கள். அதுபோல, அவர்களும் உங்களை அடையாளம் கண்டு கொள்வார்கள்.

நான் எப்போது என் புதிய சரீரத்தைப் பெற்றுக்கொள்வேன்?

""கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந் தவர்களில் முதற்பலனானார்.'' 1 கொரி. 15:20-22. இதற்கு, அவர் தொடர்ச்சியான பல உயிர்த்தெழுதல்களுக்கு முதன்மையான வர் என்று அர்த்தம். பின்தொடர்ந்து வரப்போகிற அநேகம் காரியங் களுக்கு அவர் உறுதிமொழியாக இருக்கிறார். இது, தேவனுக்கு முன்பாக அசைவாட்டப்படுகிற அரிக்கட்டு, முழுபலனையும் குறிக்கிறதான முதற்கனியாக இருப்பதைப் போன்றது.

நாம் உயிர்த்தெழுதலைக் கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்தலாம்.

முதற்பலன்

இயேசுவின் உயிர்த்தெழுதலும், அதே நேரத்தில் கல்லறையை விட்டு வெளியே வந்தவர்களும். மத்தேயு 27:52,53.

அவருடைய வருகையில் கிறிஸ்துவினுடையவர்கள் உயிரடைவார்கள்

""கர்த்தர்தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும், வானத்திலிருந்து இறங்கி வருவார். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு, உயிரோடிருக்கும் நாமும் எதிர்கொண்டுபோக மேகங்களின்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்'' 1 தெச. 4:16-18. ""...அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள். ...இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்'' வெளி. 20:4,5

இறுதிக்காலத்தில், அநீதியுள்ளவர்களாய் மரித்தவர்களின் உயிர்த்தெழுதல் ""மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை'' வெளி. 20:5.

இப்பொழுது இந்தக் காரியங்கள் எனக்கு என்ன வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றன?

மரணத்திற்குப் பின்னான வாழ்க்கையானது: முதலாவது ஆவியும் ஆத்துமாவுமாக பரலோகத்திலும், பின் மறுரூபமாக்கப்பட்ட சரீரத்துடன் இந்த பூலோகத்திலும் இருப்பதே கிறிஸ்தவத்தின் அடிப்படை நம்பிக்கை என்று முன்பே குறிப்பிட்டோம்.

சில மனிதர்களின் நம்பிக்கைகள் நூதன எண்ணங் களாகவோ அல்லது தேவனுடைய வெளிப்பாட்டை அடிப்படையாகக் கொள்ளாமலோ இருக்கலாம் ((உதாரணமாக: மறுபிறவி).

உங்கள் நம்பிக்கை, கற்பாறையாகிய கிறிஸ்துவின் உயிர்த் தெழுதலின்மேலும், அவரிடமிருந்து பெற்ற தெளிவான உப தேசத்தின்மேலும், வாக்குத்தத்தங்களின்மேலும், அவருடைய ஆவியின் தூண்டுதலைப் பெற்ற அப்போஸ்தலர்கள், மற்றும் தீர்க்கதரிசிகள்மேலும் அமைந்திருக்கிறது.

மேலும் உங்களுக்குப் பலன் தரக்கூடிய கருத்துக்கள்:

நீங்கள் மறுபடியும் பிறந்திருக்கிறீர்கள் என்பதில் நீங்கள் உறுதியாயிருக்கலாம்.

""இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே,... ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெனிப்பித்தார்'' என்று 1 பேதுரு 1:3ல் பேதுரு கூறுகிறார்.

அவர் இயேசுவின் உயிர்த்தெழுதலை நம்முடைய புது பிறப்போடு தொடர்புபடுத்துகிறார். இயேசு மரித்தோரி லிருந்து எழுந்தபோது, அவருக்குள், பிதாவோடு ஐக்கியம் கொள்ளத்தக்க, ஒரு மனித உடலில் ""உயிர்த்தெழுந்த ஜீவன்'' இருந்தது.

தன்னுடைய உயர்த்தெழுதலின் மூலம் இயேசு தம்முடை யதைப் போன்ற புதியதொரு வாழ்வை நமக்காகச் சம்பாதித்தார். நாம் கிறிஸ்தவர்களாகும்போது நமது ஆவி உயிர்த்தெழுதலின் புதிய வல்லமையுடன் உயிர்ப்பிக்கப் படுகிறது: ""நாம் மறுபடியும் பிறக்கிறோம்''.

""தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிர மங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனே கூட உயிர்ப்பித்தார். கிருபையினாலே இரட்சிக் கப்பட்டீர்கள்...'' எபேசியர் 2:4-6.

நீங்கள் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று உறுதியாயிருக்கலாம்.

பவுல், நாம் நீதிமான்களாக்கப்படுவதை, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுடன் தொடர்புபடுத்துகிறார். (இது நாம் தேவனுக்கு முன்பாகக் குற்றவாளிகளல்ல, நீதிமான்களாக இருக்கிறோம் என்று அறிவிப்பதாகும்). தேவன் ""அவரோடே கூட நம்மை எழுப்பியுள்ளதால்'' எபேசியர் 2:6, நாம் கிறிஸ்துவோடு கூட ஐக்கியப்பட்டவர்களாயிருப்பதால், பிதா அவரை ஏற்றுக்கொண்டது, நம்மையும் ஏற்றுக் கொண்டதாகும்.

""பாவங்களுக்குரிய எல்லாத் தண்டனையும் செலுத்தித் தீர்க்கப்பட்டது; என் பார்வையில் நீர் ஒரு குற்றவாளியல்ல, நீதிமான்'' என்று பிதா கிறிஸ்துவிடம் சொல்லியிருக்கும் போது, அவருடைய அறிவிப்பு இரட்சிப்புக்காக கிறிஸ்துவில் நம்பிக்கைக் கொண்டுள்ள நமக்கும் பொருந்தும். இவ்வகையில் பார்த்தால், நம்முடைய நீதியை அவர் சம்பாதித்து வைத்துள்ளார் என்பதற்குக் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் ஒரு முடிவான சான்றையும் கொடுக்கிறது.

தேவனின் வல்லமை உங்களுக்குரியது என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கலாம்

பவுல், நமக்குள் கிரியை செய்யும் ஆவிக்குரிய வல்லமையுடன் இயேசுவின் உயிர்த்தெழுதலைத் தொடர்புபடுத்துகிறார். ""தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்து சத்துவத்தின் வல்லமையின்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்க வேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன்'' எபேசியர் 1:19.

இதை எபேசிலுள்ளவர்கள் அறியவேண்டுமென்று தான் ஜெபித்துக்கொண்டிருப்பதாகப் பவுல் அவர்களுக்குக் கூறுகிறார். கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதால், நாமும் புதிதாக்கப்பட்ட ஜீவனோடு வாழமுடியும் என்று அவர் கூறுகிறார்.

இந்த உயிர்த்தெழுதலின் வல்லமையில், நமது வாழ்வில் பாவத்தின் மீது வெற்றி கொள்ளும் வல்லமையும், ரோமர் 6:14, நற்செய்தி அறிவித்தல், அற்புதங்கள் நிகழ்த்துதல், சத்துருவின்மேல் வெற்றி போன்ற இராஜ்ஜியப் பணிகள் செய்யும் வல்லமையும் அடங்கும். இந்த அனைத்து வல்லமையும், கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தபின் சீஷர்களுக்குக் கொடுக்கப்பட்டதும், அவர்களுடைய வாழ்வில் கிரியை செய்துகொண்டிருந்த உயிர்த்தெழுதலின் புதிய வல்லமையின் ஒரு பகுதியுமாகும்.

""இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும்...'' என்று பிலிப்பியர் 3:10ல் பவுல் கூறுவதைப் போன்றே, நாமும் குறிக்கோளைக் கொண்டிருக்க முடியும்.

உங்கள் நலம் மற்றும் பலத்தை அறியலாம்.

நீங்கள் உடல் நலத்துடனேயே மரிப்பதைத்தான் தேவன் விரும்புகிறார். ""இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர், உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களை உயிர்ப்பிப்பார்'' ரோமர் 8:11.

""தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்திரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்; தாம், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமையின்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்தில் காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்க வேண்டுமென்றும் வேண்டிக்கொள்கிறேன்'' எபேசியர் 1:18-19.

உங்கள் மரணத்தைக்குறித்துப் பயப்படத் தேவையில்லை. நம்பிக்கையுடன் மரணத்தை நீங்கள் சந்திக்கமுடியும். ""ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் (இயேசு) அவர்களைப் போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியான பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரண பயத்தினாலே அடிமைத்தனத்துக்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலை பண்ணும்படிக்கும் அப்படியானார்'' எபிரெயர் 2:14,15.

""மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது... நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயம் கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்'' 1 கொரி. 15:54,57.

கர்த்தருக்காகச் செய்யப்படும் உங்கள் ஊழியத்தில் நீங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் ஈடுபட முடியும். இதில் எதுவுமே கனியற்றதாகவோ, கால விரயமாகவோ, அல்லது பலனற்றதாகவோ இருக்க முடியாது. ""ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர் களாயும் இருப்பீர்களாக'' 1 கொரி. 15:58.

விசுவாசிகளாக மரித்துள்ள உங்களுக்கு அருமையானவர்களைக் குறித்து மன அமைதியோடு இருக்க முடியும்.

அவர்கள் கர்த்தரோடு இருக்கச் சென்றிருக்கிறார்கள். புதியதொரு சரீரத்தைப்பெறக் காத்திருக்கிறார்கள். நீங்கள் அவர்களை, திரும்பவும் காணவும், நேசிக்கவும் போகிறீர்கள்.

""சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை. இயேசுவானவர் மரித்துப் பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார்'' 1 தெச. 4:13,14.

நீங்கள் உங்கள் விசுவாசத்தில் பலப்பட முடியும்.

உங்களைச் சுற்றியுள்ள உலகம் மகா கேடுள்ளதும் பயங்கர முமானதாக மாறினாலும், மற்றவர்கள் கர்த்தருக்கான உங்கள் சாட்சியை ஏற்காவிட்டாலும், நீங்கள் உற்சாகப்படுத்தப்பட்டு, உங்கள் விசுவாசத்தில் வளரமுடியும். அவர் உங்களைக் கரம் பிடித்திருப்பதுடன், தம்முடைய வாக்குத்தத்தத்தில் உண்மையுள்ளவராயுமிருக்கிறார்.

""தேவன் நம்மைக் கோபக்கினைக்கென்று நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் இரட்சிப்படைவதற்கென்றே நியமித்தார். நாம் விழித்திருப் பவர்களானாலும், நித்திரையடைந்தவர்களானாலும், தம்முடனேகூட நாம் ஏகமாய்ப் பிழைத்திருக்கும்படி அவர் நமக்காக மரித்தாரே. ஆகையால் நீங்கள் செய்துவருகிற படியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படிச் செய்தார்'' 1 தெச. 5:9-11.

ஒரு அச்சாரம்

முடிவாக ஓர் வார்த்தை: நீங்கள் உள்ளான ஆவிக்குரிய ஒரு புதிய மனிதனாக மாறி, உங்களுக்குள்ளே வாசம்பண்ண பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பதாலும், நீங்கள் உள்ளத்தில் உயிர்த்தெழுதலைக் குறித்து உள்ளான தகவலைப் பெற்றிருக் கிறீர்கள். பரிசுத்த வேதாகமம், பரிசுத்த ஆவியானவரை, ""அச்சாரம்'' அல்லது பிதா கொடுத்துள்ள ""உறுதிப்பாடு'' என்று அழைக்கிறது. நீங்கள் உங்களுடைய புத்தம்புது சரீரத்தைப் பெறும்போது மற்ற எல்லாவற்றையும் அவர் உங்களுக்கு நிச்சயம் கொடுப்பார்.

""இதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறவர் தேவனே; ஆவியென்னும் அச்சாரத்தை நமக்குத் தந்தவரும் அவரே'' 2 கொரி. 5:5.

""நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரை போடப்பட்டீர்கள். அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்திரத்தின் அச்சாரமாயிருக்கிறார்'' எபேசியர் 1:13,14.

இறுதி நியாயத்தீர்ப்பு

""இது எங்கு போய் முடியம்?'' என்ற நம் கேள்விக்கு விடை தருகின்ற அநேக காரியங்கள் உயிர்த்தெழுந்த புது சரீரத்தைப் பெற்றுக்கொள்ளுமுன் நடைபெற உள்ளன.

கிறிஸ்துவின் இரண்டாம் வருகை, ஆயிர வருட அரசாட்சி, இறுதி நியாயத்தீர்ப்பு, அவிசுவாசிகளுக்கான நித்திய தண்டனை, விசுவாசிகளுக்கான நித்திய பரிசு, புதிய வானத்திலும் புதிய பூமியிலும் தேவனோடுள்ள வாழ்வு, முதலிய முக்கிய நிகழ்ச்சிகள் இந்த முழுப்பிரபஞ்சத்தையும் பாதிக்கும்.

ஆண்டவராகிய இயேசுவே வாரும்

திடீரென, பார்க்கக்கூடிய விதத்தில் சரீரத்தில் கிறிஸ்து திரும்ப வருவார். இயேசு பரத்திற்கேறினவுடனே இரண்டு தூதர்கள் சீஷர்களை நோக்கி, ""உங்களிடத்தினின்று வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்திற்கு எழுந்தருளிப் போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார்'' என்றார்கள் '' அப். 1:11.

இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்தபோது, ""நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்'' என்று யோவான் 14:3ல் வாக்குப் பண்ணினார். ""ஏனெனில், கர்த்தர்தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்ததோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்போழுது கிறிஸ்துக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்'' 1 தெச. 4:16ல் என்று பவுல் கற்றுத்தருகிறார்.

இயேசு திரும்ப வருவதாக வெளிப்படுத்தின விசேஷத்தில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. இது ""இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும் '' வெளி. 1:7 என்ற வலியுறுத்தலோடு ஆரம்பித்து, வெளி. 22:20ல் ""மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்'' என்ற இயேசுவின் வாக்குத்தத்த்தோடு முடிகிறது.

1 கொரி. 16:22ல் உள்ள ""மாரநாதா'' என்ற பதத்திற்கு ""எங்கள் ஆண்டவரே, வாரும்!'' என்று அர்த்தம். நாம் இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாகும்படி ""நம்முடைய குடியிருப்போ பரலோகத்தில் இருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்'' என்று பிலிப்பியர் 3:20ல் உள்ள வாக்குத்தத்தைப் பிடித்தவர்களாக, மிக ஆவலாகக் காத்திருக்க வேண்டும்.

""அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார். அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள், விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்.'' மாற்கு 13:32,33 ""அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும். அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்''. மத்தேயு 24:29,30

விசுவாசிகளின் இறுதிப் பரீட்சை

கிறிஸ்து திரும்ப வரும்பொழுது, மற்ற விசுவாசிகளோடுகூட உங்களையும் ஆண்டவராகிய இயேசு தனிப்பட்ட விதத்தில் பரீட்சை செய்வார். இந்தப் பரீட்சையில், உங்கள் குணம், உக்கிராணத்துவம் மற்றும் ஆண்டவருக்கான உங்கள் உழைப்பு ஆகியவை அடங்கும்.

நீங்கள் இயேசுவை விசுவாசித்ததின் மூலம் இரட்சிக்கப் பட்டதினால், அந்த இரட்சிப்பை இழந்துபோக மாட்டீர்கள். ஆனால் உங்கள் பரிசை நீங்கள் இழந்து போகக்கூடும். ""ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்பட வேண்டும்.'' 2 கொரி. 5:10.

பரிசுகள் (பிரதிபலன்கள்)

நீங்கள் சிறிய காரியத்தில் உண்மையுள்ளர்களாயிருந்து, உங்களுக்குக் கொடுக்கப்பட்ட வரங்களையும், சந்தர்ப் பத்தையும், தாலந்துகளையும் சரியாகப் பயன்படுத்தி இலாபத்தைக் காட்டியிருந்தால், இறுதித்தேர்வில் தேர்வில் தேர்வு செய்யப்பட்டு வெகுமதியும் பெறுவீர்கள். இந்த வெகுமதியில், இயேசுவின் பாராட்டும், ஏற்றுக் கொள்ளுதலும் அடங்கும்; உங்கள் ஊழியத்தின் மூலமாக, நிரந்தர பலன்களைக் காண்பதும்; ஆண்டவரிடமிருந்து அதிகப் பொறுப்புகளைப் பெறுதலும் அடங்கும்.

உங்களுடைய வாழ்க்கையில் சொந்த காரியங்களையே செய்து, சோம்பேறியாய், கட்டுக்கோப்பான வாழ்க்கை வாழாமல், தேவன் கொடுத்த தாலந்துகளை சரியாகப் பயன்படுத்தாமல், கொடுக்கப் படுகிற சந்தர்ப்பங்களை பயன்படுத்தாமல், மற்றவர்களுக்காகப் பொறுப்பேற்க மறுப்பீர்களாயின், நீங்கள் இறுதித் தேர்வில் தோல்வியுறுவீர்கள். ""ஒருவன் அந்த அஸ்திபாரத்தின் மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால், அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும். அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான்'' 1 கொரிந்தியர் 3:12-15.

வெளிப்படுத்தின விசேஷத்தில், உலகம், மாமிசம், பிசாசு இவைகளை மேற்கொள்ளுகிற கிறிஸ்தவனுக்குக் கொடுக்கப்படுகிற பரிசுகளைக் குறித்துக் கூறப்பட்டுள்ளது. எபிரெயருக்கு எழுதின நிருபத்தில், ""...மிகுந்த பலனுக் கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள். நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது'' என எபிரெயர் 10:35,36ல் அறிவுறுத்தப் படுகிறோம்.

ஆயிரம் வருட அரசாட்சி

""ஆயிர வருடம்'' என்கிற வார்த்தை வெளிப்படுத்தல் 20:4,5 லிருந்து வருகிறது. அது ""பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவும் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறை வேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காத படிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரை போட்டான்.'' வெளி. 20:2,3. என்ற வசனத்தின்படியானது.

இதைக்குறித்த கருத்துக்கள்

ஆயிர வருடத்தைக் குறித்து பல வியாக்கியானங்கள் உள்ளன. சமீபத்தில் கொடுக்கப்பட்ட ஒரு வியாக்கி யானத்தில் (ஆயிர வருடத்திற்குப்பின்), ஆயிர வருடத்தில், சபையானது அதிகமான வளர்ச்சியைக் காணும், சுவிசேஷம் வளரும்: இதனால், உலக மக்கள் தொகையில் அநேகர் கிறிஸ்தவர்களாயிருப்பார்கள். அப்பொழுது கிறிஸ்து வருவார் என்றுள்ளது.

கிறிஸ்து உலகத்திற்கு வருகையில் விசுவாசிகளும் அவிசுவாசிகளும் எழுந்திருப்பார்கள், அப்பொழுது இறுதி நியாயத்தீர்ப்பு இருக்கும். அதன்பின், ஒரு புதிய வானமும் புதிய பூமியும் இருக்கும்.

மற்றொரு கருத்தின்படி, கிறிஸ்து ஆயிரவருடத்திற்கு முன்பு வருவார். இந்த கருத்து, முதலாம் நூற்றாண்டு முதற்கொண்டு நம்பப்படுகிற ஒரு சரியான கருத்தாகும். இந்த கருத்தின்படி, இச்சபையின் காலம், மாபெரும் குழப்பமும், கஷ்டமும் உலகத்தின்மேல் வரும் கடைசிக் காலம்வரை தொடரும்.

சபையின் கடைசிக் காலத்தில் கிறிஸ்து வந்து, ஆயிரவருட அரசாட்சியை ஸ்தாபிப்பார். அவர் வரும்பொழுது, மரித்த விசுவாசிகள் எழுந்திருப்பார்கள்.

அவர்களுடைய ஆத்துமா, சரீரத்தோடு சேர்க்கப்படும்; இந்த விசுவாசிகளும், உயிரோடிருக்கும் விசுவாசிகளும், கிறிஸ்து வோடு சேர்ந்து, ஆயிரம் வருடம் அரசாட்சி செய்வார்கள்.

அவிசுவாசிகளின் நியாயத்தீர்ப்பு

ஆயிர வருட அரசாட்சி முடிந்தவுடன், அவிசுவாசிகளுக்கான நியாயத்தீர்ப்பு நடைபெறும். அவர்கள் உயிர்த்தெழுந்த சரீரத்தோடு, கிறிஸ்துவின் நியாயாசனத்திற்குமுன் நிற்பார்கள். அங்கே, அவர்களுக்கான நித்திய முடிவு அறிவிக்கப்படும்.

அவிசுவாசிகளுக்கான, இந்த இறுதி நியாத்தீர்ப்பு ஆயிர வருட அரசாட்சியின் இறுதியில் நடைபெறும். இந்தக் காட்சி யோவானுக்கு அருளப்பட்ட தரிசனத்தில் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது: ""நான் பெரிய வெள்ளை சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமூகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்று போயின; அவைகளுக்கு இடம் காணப்படவில்லை. மரித்தோராகிய சிறியோரையும், பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவ புஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்போது அந்த புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின் படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள். சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள். அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக் கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம். ஜீவ புஸ்தகத்திலே எழுதப்பட்ட வனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக் கடலிலே தள்ளப்பட்டான்'' வெளி. 20:11-15.

கடந்த காலங்களில், அவிசுவாசத்திலும் கீழ்ப்படியாமை யிலும் வாழ்ந்த மக்கள்மேல் தேவன் நியாயத்தீர்ப்பைக் கொண்டு வந்தார். உதாரணமாக, வெள்ளத்தையும், சோதோம் கொமோரா அழிவையும் நாம் எடுத்துக் கொள்ளலாம்.

இத்தகைய ஆரம்ப நியாயத்தீர்ப்பு, வரப்போகிற இறுதி நியாயத்தீர்ப்பை நினைவுபடுத்துகிறது என்று பேதுரு கூறுகிறார். ""கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையி னின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக் குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார். விசேஷமாக அசுத்த இச்சையோடே மாம்சத்திற்கேற்றபடி நடந்து, கர்த்தத்துவத்தை அசட்டை பண்ணுகிறவர்களை அப்படிச் செய்வார்'' 2 பேதுரு 2:9,10.

ஆயிர வருட அரசாட்சியும், அதைத்தொடர்ந்து கலகமும் நடைபெறும், அதன் முடிவில் நியாயத்தீர்ப்பு இருக்கும்.

ஆயிர வருட அரசாட்சியையும், உலகத்தின் மேலுள்ள சாத்தானின் தாக்கத்தை நீக்குவதையும், யோவான் அழகாக வெளி. 20:1-6ல் சித்தரிக்கிறார். ""அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள...யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படி புறப்படுவான்'' வெளி. 20:7,8.

சாத்தானின் இறுதித் தோல்வி

இறுதிக்கால கலகக்காரர்களை தேவன் தோல்வியுறச் செய்வார். ""அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான் களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்து கொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது. மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங் களிலும் வாதிக்கப்படுவார்கள்'' வெளி. 20:9,10.

ஒவ்வொரு வார்த்தையும் செய்கையும் நியாந்தீர்க்கப்படும்

நியாயாசனத்திற்குமுன், ஒவ்வொரு செய்கையும் நினைவுகூறப்பட்டு, கணக்கெடுக்கப்பட்டு, அதற்கான தண்டனையும் அந்நாளில் கொடுக்கப்படும். ""மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும்'' மத்தேயு 12:36, ""ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்'' பிரசங்கி 12:14.

மறுபடியும் பிறவாதவர்கள், தங்களுடைய சரீரத்தோடு மறுபடியும் சேர்க்கப்படுவார்கள். அவர்கள் ஒன்றும் இல்லாத நிலைக்குத் தள்ளப்படமாட்டார்கள். "இரண்டாம் மரணம்' என்பது இவர்கள் தேவனுடைய பிரசன்னத்திலிருந்து பிரிக்கப்பட்டு, அக்கினிக்கடலில் போடப்படுவார்கள் என்று பொருள்படும். இந்த இடம் நித்திய சிறையாகும்; இது, தேவன் சிருஷ்டிப்பு, மனசாட்சி மற்றும் சுவிசேஷத்தின் மூலமாக தம்மை மனிதர்களுக்கும், தூதர்களுக்கும் வெளிப் படுத்தியிருந்தும், அவரைத் தள்ளிவிட்ட அவர்களை தேவன் நித்தியமாக தள்ளிவைக்கிற ஒரு நிலையாகும்.

அக்கினிக் கடல்

தேவனுடைய கிருபையையும், இரட்சிப்பையும், தள்ளிவிட்ட மக்களுக்கும், சாத்தானுக்கும், அவனுடைய தூதர்களுக்கும் ஆயத்தம் பண்ணப்பட்ட இடம்தான் அக்கினிக் கடல்; தானியேல் 12:1,2, 2தெச. 1:8-10, மத்தேயு 25:41. தேவனுடைய நியாயத்தீர்ப்பு, நரகம் ஆகியவற்றைக்குறித்த வெளிப்படுத் தலுக்காக ஜெபிப்போம். தேவனுடைய வழிகள் நம்முடைய வழிகளல்ல. அதேபோன்று, அவருடைய எண்ணங்களும் நம்முடைய எண்ணங்களல்ல. தேவன் அன்புள்ளவர், அதேசமயம் அவர் பரிசுத்தர், நீதியுள்ளவர் மற்றும் உண்மையுள்ளவர்.

அதனால், அவர் ஒவ்வொருவருக்கும், அவரவருடைய செய்கைக்கேற்றபடி முழுமையாக நியாயந்தீர்த்து, அதற்கேற்ற தண்டனையைத் தரவேண்டியுள்ளது. கிறிஸ்து இந்த தண்டனையை ஏற்றுக்கொண்டார், ஆனால் அவர்மேல் விசுவாசம், மனந்திரும்புதலின் மூலம் அவரோடு ஒன்றாகத் தம்மைக் காண்பித்துக்கொள்ள மறுத்தவர்களும் தங்களுடைய தண்டனையாகிய, தேவ கோபாக்கினையை அனுபவிக்க வேண்டும். ""குமாரனிடத்தில் விசுவாசமா யிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலை நிற்கும்'' யோவான் 3:36.

புதிய வானமும் புதிய பூமியும்

இறுதி நியாயத்தீர்ப்பு முடிந்தவுடன் என்ன நடக்குமென நாம் எதிர்பார்க்கலாம். ஒரு புதிய வானத்திலும் ஒரு புதிய பூமியிலும் நாம் வாழ்வோம். சிருஷ்டிப்பு புதிதாக்கப்படும், அதில் நாம் இந்த புதிய சரீரத்தோடு வாழ்வோம். நாம் நினைப்பதற்கும்மேல் மிகவும் அழகான, சிறப்பான நகர மாகிய புதிய எருசலேமில் நாம் தேவனுடைய பிரசன்னத்தில் வாழ்வோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்குத்தத்தங்கள் தேவன் என்ன செய்யப்போகிறார் என்பதை சிறிது விளக்குகிறது.

காலம் தொடர்ந்து செல்லும், நாம் நமக்கு நியமிக்கப்பட்ட இடமாகிய புதிய வானம், புதிய பூமியிலே அவரை சேவிப் போம். காலம் முடிந்துவிடும் என வேதம் கூறவில்லை, ஆனால் நாம் ஒவ்வொரு நாளும் அவரைத் தொடர்ந்து சேவிப்போம்.

யோவான் கடந்து செல்லுகிற காலத்தைக் குறித்து எழுதும் போது, புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தில் இருக்கிற ஜீவ விருசட்சத்தை குறிப்பிடுகின்றார். அவர் அதை பன்னிரண்டு விதமான கனிகளைத்தரும் மரம் என விவரிக்கிறார், ""...அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்'' வெளி. 22:2.

""பின்பு, நான் புதிய வனத்தையும் புதிய பூமியையும் கண்டேன்;...புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக் கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெரும் சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவர்களுடைய வாசஸ்தலம் இருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களா யிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்'' வெளி. 21:1-3.

தேவனுடைய இறுதி நியாயத்தீர்ப்பு எந்த விதமான வேறுபாட்டை இப்போது உங்களுக்கு ஏற்படுத்துகிறது?

அழிந்துபோகிறவர்களைக் குறித்து - விசேஷமாக, பரிசுத்த ஆவியின் மூலமாக மறுபடியும் பிறவாத, உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களைப் பார்க்கும்போது உங்களுக்கு ஓர் ஆழமான அக்கறை வந்திருக்கும். உங்கள் வீட்டிலும் வெளியிலுமுள்ள மக்கள் இரட்சிக்கப்படும்படி உங்களாலான எல்லாவற்றையும் செய்வீர்கள். ""கர்த்தருக்குப் பயப்படத்தக்கதென்று அறிந்து, மனுஷருக்குப் புத்தி சொல்லுகிறோம்; ...கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது, ...தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்க ளென்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக் கொள்ளுகிறோம்'' 2 கொரி. 5:11,14,20.

எதிர்பாருங்கள்

நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் இன்னும் பல மாறுதல்களை எதிர்பார்க்கலாம். மனந்திரும்புதல்- மனமாற்றம், நேர்எதிர் திசையில் திரும்புதல் போன்றவைகளில் இந்தப்பாடம் ஆரம்பித்து, இறுதி நியாயத்தீர்ப்போடு முடிவடைகிறது. கர்த்தருக்குப் பயப்படுகிற பயம், அவரைப் பிரியப்படுத்துகிறத்திற்காக அவருடைய கிருபையின் மேல் உள்ள விசுவாசம் மற்றும், அவர்கள் அளிக்கும் பலன்களைக் குறித்ததான நம்பிக்கை உங்களை மேற்படி மாற்றத்திற்காக ஊக்கப்படுத்தும்.

முதிர்ச்சியை நோக்கி

உங்களுடைய வாழ்க்கையைக் கட்டுவதற்கும், இந்த சபையிலே உங்களை ஓரு நல்ல உறுப்பினராக மாற்றுவதற்கும் பரிசுத்த ஆவியானவரை நம்புங்கள்.

ஒருவரையொருவர் நேசிப்பதிலும், கிறிஸ்தவ முதிர்ச்சியிலே வளருவதற்கும் நீங்கள் பரிசுத்த ஆவியானவருக்கு இடங்கொடுங்கள். ""இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்'' என்று அப்போஸ்தலனாகிய பவுல் வலியுறுத்துகிறார்''. ""...தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்'' பிலிப்பியர் 2:12,13.

""கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களை நாம் விட்டு, தேவன்பேரில் வைக்கும் விசுவாசம், ...என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல் பூரணராகும்படிக் கடந்துபோவோமாக. தேவனுக்கு சித்தமானால் இப்படியே செய்வோம்'' எபிரெயர் 6:1,3ல் எபிரேய ஆக்கியோன் கூறுகிற இந்த வார்த்தைகளை இந்தப் பாடத்திட்டத்தின் இறுதி வார்த்தையாக எடுத்துக் கொள்வோம்.

No comments: